Archives: அக்டோபர் 2020

குச்சிகளும் செங்கற்களும் தேவனும்

அவர்களின் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் தேவன் அவர்களை என்ன செய்ய அழைகிக்கிறார் என்ற கேள்வியோடு  ஜெபித்த பிறகு, மார்க்கும் நீனாவும் அவர்கள் நகர்ப்புற மையத்திற்கு செல்வது தான் சரி என்று தீர்மானித்தனர். அவர்கள் ஒரு காலியான வீட்டை வாங்கினர். வீடு  புதுப்பித்தல் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையிலே புயல் வந்தது. மார்க் எனக்கு இவ்வாறு ஒரு உரை செய்தியில் எழுதினார்: “ எங்கள் நகரம் வழியாக பாய்ந்த புயல், எங்களுடைய  புதுப்பித்தல் வேலையை தகர்த்தெரிந்தது. வெறும் குச்சிகளும் மற்றும் செங்கற்களும் தான் நிற்கின்றன. தேவன் ஏதோவொன்றைக் திட்டம் கொண்டிருக்கிறார்போலும்” 

கட்டுப்படுத்த முடியாத புயல்கள் நம்மை வியப்புக்குள்ளாக்கும், வாழ்க்கையில் குழப்பத்தை உருவாக்கும்.  துரதிர்ஷ்டத்தின் மத்தியில் நாம் தேவனை நோக்கிக்கொண்டிருப்பது தான்  பிழைக்க ஒரே  வழி. 

யோபின் வாழ்க்கையில் வானிலையால் ஏற்பட்ட பேரழிவு, சொத்து இழப்பு மற்றும் பிள்ளைகளின் இறப்பு
(யோபு 1:19) அவருடைய வாழ்வில் அவர் சந்தித்த அதிர்ச்சியாகும். அதற்கு முன் மூன்று தூதர்கள் துற்செய்திகளைக் கொண்டு வந்தார்கள் (வச. 13-17).

எந்த ஒரு நாளிலும், விருந்தில் இருந்து வருத்தத்திற்கு, கொண்டாட்டத்திலிருந்து மரணத்திற்கு ஊடே நாம் செல்ல கூடும். நம் வாழ்க்கையை துரிதமாகவே  - நிதி, உறவு, உடல், உணர்ச்சி, ஆன்மீகம் ரீதியில் - வெறும்  “குச்சிகள் மற்றும் செங்கற்கள் ஆகலாம். ஆனால் கடவுள் எந்த புயலையும் விட வலிமையானவர். வாழ்க்கையின் சோதனைகளில் இருந்து தப்பிக்க நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும், யோபைபோல  “கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லக்கூடிய விசுவாச பக்குவம் வேண்டும்.” (வச. 21).

அனைவருக்கும் ஒரு வழிகாட்டி தேவை

என்னுடைய புது மேற்பார்வையாளருடைய அறைக்குள் நான் நுழையும் போது சற்றே பயந்து தயக்கம் கொண்டேன். ஏனென்றால் பழைய மேற்பார்வையாளர் கடினமான குணம் உள்ளவர். அடிக்கடி அவருக்கு கீழ் வேலை செய்கிறவர்களை அழ வைத்தார். புதிதாக வந்தவர் எப்பேற்பட்டவரோ என்று யோசித்துக்கொண்டே அந்த அறையில் நுழைந்தேன். அவர் என்னை முகம் மலர்ந்து வரவேற்றபோது என்னுடைய பயங்கள் நீங்கியன; என்னுடைய அனுபவங்களை அவர் விசாரித்து கனிவாக பேசினார். அவர் உண்மையிலேயே கரிசனை கொண்டவர் என்று நான் அறிந்துகொண்டேன். இயேசுவின் மேல் விசுவாசம் கொண்ட  அவர் எனக்கு நண்பரும், ஊக்குவிப்பவரும், குருவுமாக ஆனார்.

அப்போஸ்தலர் பவுல் இவ்விதமாக “பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய தீத்துவுக்கு” (தீத்து 1:1) ஆவிக்குரிய குரு. அவனுக்கு எழுதின நிருபத்தில் அவன் சபையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறி “நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு. (தீத்து 2:1),  “நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக”. (வ 7-8)  என்கிறார். அதனால் தீத்து அவருடைய “சகோதரனும்,கூட்டாளியும், உடன்வேலையாளுமாக (2 கொரி. 2:13; 8:23) கருதப்பட்டான்.

நம்மில் அநேகர்  - ஒரு ஆசிரியர், பயிற்சியாளர், தாத்தா, இளைஞர் தலைவர் அல்லது போதகர் - இவர்கள் மூலமாக அறிவு, ஞானம் ஊக்கம், தேவன் மேல் விசுவாசம் இவைகளில் வளர்ந்திருக்கிறோம்.  இயேசுவுடன் பயணிக்கும்போது நீங்கள்  கற்றுக்கொண்ட ஆவிக்குரிய படங்களால் யார் பயன் பெறலாம்.

ஒரு பாரஊர்தி (truck) ஓட்டுநரின் கரங்கள்

என்னுடைய தகப்பனாருக்கு கணைய புற்றுநோய் வந்துவிட்டது என்ற செய்தி எனக்கு மிகவும் அதிர்ச்சி தந்தது. ஏற்கனவே அவர் புராஸ்டேட் புற்று நோயிலிருந்து மீண்டு வந்தவர். என்னுடைய அம்மா நீண்ட சுகவீனத்தால் படுக்கையிலிருந்ததால் அவர்களை கவனித்துக் கொண்டிருந்ததும்  என்னுடைய அப்பாதான்.  இப்பொழுது இருவரையுமே பார்த்துக் கொள்ளவேண்டும் என்றால் கடினமான காரியம்தான்.

நான் அவர்களைப் பார்க்க ஊருக்கு சென்றபோது அவர்கள் ஆலயத்திற்கு ஒரு ஞாயிறு சென்றேன். அப்போது ஒரு மனிதன் என்னை அணுகி “நான் உதவட்டுமா” என்று கேட்டார். இரு நாட்களுக்குப் பிறகு அவர் எங்கள் வீட்டிற்கு ஒரு பட்டியலோடே வந்தார். கீமோ தெரபி துவங்கும்போது  உங்களுக்கு உணவு வேண்டியதாயிருக்கும் என்றார். “நான் அதை அட்டவணை போட்டு ஏற்பாடு செய்கிறேன், உங்கள் தோட்டத்தில் புல் வெட்ட வேண்டும் அல்லவா? அதையும்  நான் செய்யக்கூடும், உங்கள் வீட்டு குப்பையை அகற்றும் நாள் வாரத்தில் எது?” இவ்வாறாக கேட்டுக்கொண்டே போனார். அவர் ஒரு ஓய்வெடுத்த டிரக் ஓட்டுனர். எங்களுக்கோ தேவதூதர் மாதிரி மாறினார். பலருக்கு  இவ்விதமாக உதவி செய்திருக்கிறார் என்று நாங்கள் பிறகு கேள்விப் பட்டோம்.

இயேசுவின் மேல் விசுவாசம் வைத்தவர்கள் எல்லாருமே மற்றவர்களுக்கு உதவி செய்ய அழைக்கப்படுகிறார்கள் (லூக்கா 19:25-37) என்றாலும் சிலருக்கு இவ்வாறு செய்ய சிறப்பான திறமை உண்டு. அப்போஸ்தலர் பவுல் இந்த வரத்தை “இரக்கஞ்செய்கிற வரம்” என்கிறார்..

இந்த வரம் உள்ள மக்கள் தேவையை உடனடியாக கண்டுகொண்டு சோர்வடையாமல் நடைமுறை உதவி செய்வார்கள். பரிசுத்த ஆவியின் மூலமாக உந்தப்பட்டு அவர்கள் கிறிஸ்துவினுடைய கரங்களை போல செயல்பட்டு நம்முடைய காயங்களை தொடுவார்கள் (வச. 4-5)..

சில நாட்களுக்கு முன்பாக என்னுடைய அப்பா கீமோதெரபிக்கு போக வேண்டியிருந்தது. எங்களுடைய “தேவதூதனே” அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அந்த இரவு வீட்டில் குளிர்சாதனப்பெட்டியில் உணவு அதிகமாக அடிக்கிவைக்கப்பட்டிருந்தது. தேவனின் இரக்கத்தை  ஒரு டிரக் ஓட்டுனர் கரங்களின் மூலமாக நாங்கள் கண்டுகொண்டோம்.

இது யாருக்காக?

அந்த காட்சி என்னை சத்தமாகவே சிரிக்க செய்தது. சாலையின் இருபுறமும் கொடிகளை ஆட்டிக்கொண்டு, வண்ணப்பிரதிகளை எறிந்துகொண்டு, கட்சித் தலைவர் வருகையை எதிர்நோக்கி மக்கள் கூட்டம் பெருகிற்று.  அப்பொழுது சாலையின் நடுவே ஒரு தெரு நாய்க்குட்டி மெதுவாக நடந்து போனது. அங்கு எழும்பின ஆரவாரம் எல்லாம் தனக்கே என்று புன்னகை செய்ததுபோல எனக்கு பட்டது. 

நாய்க்குட்டி இவ்வாறாக நடந்துகொண்டது ஒரு விதத்தில் அழகாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களுடைய புகழ்ச்சியை நாம் கடத்திக் கொள்வது நம்மையே விழச்செய்யும். தாவீது இதை அறிந்திருந்தான்; தன்னுடைய பெலசாலிகள் தம்முயிரை துச்சமென்றெண்ணி கொண்டுவந்த தண்ணீரை அவன் குடிக்க மறுத்தான். பெத்லெகெமிலிருந்த அந்த கிணற்றிலிருந்து யாராவது குடிக்க நீர் கொண்டு வந்தால் நலமாயிருக்கும் என்று அவன் ஏறக்குறைய தனக்குள் சொல்லிக் கொண்டதை  அவனுடைய மூன்று பலசாலிகள் உண்மையாக எடுத்துக்கொண்டு எதிரிகளுடைய அணிகளைத் தாண்டி தண்ணீர் மொண்டு கொண்டுவந்தனர். அதைக் கண்டு உணர்ச்சிவசமான தாவீது அதை குடிக்க மறுத்தான். அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிவிட்டான். (2 சாமு. 23:16)

கனத்தையும் துதியையும் நாம் எவ்வாறு கையாளுகிறோம்  என்பது நம்மை குறித்து அதிகம் சொல்லும். ஆண்டவருக்கு மகிமை செலுத்தப்படும் போது குறுக்கிடாதே. அந்த அணிவகுப்பு நமக்கு அல்ல. நம்மை யாராவது கௌரவித்தால் அவர்களுக்கு நன்றி சொல்லி இயேசுவுக்கே மகிமை செலுத்துங்கள்  அந்த “தண்ணீர்” நமக்கல்ல. துதி செலுத்திய பின் அதை ஆண்டவருக்கு முன்பாக ஊற்றி விடுங்கள்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தகுதி உரிமையல்ல

ஞாயிறு பள்ளிக்குப் பிறகு, வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினேன். தென்னிந்தியாவின் ஒரு முக்கிய கல்லூரியின் புதிய இயக்குநராக நான் அறிந்திருந்த ஒருவர் பின்னால் அமர்ந்திருந்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வழக்கமாகச் செல்லும் பொதுப் பேருந்தில் அவரைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது பதவியில் உள்ள பெரும்பாலானோர் தங்களுக்கென நியமிக்கப்பட்ட வாகனம் மற்றும் ஓட்டுநரைக் கொண்டிருப்பார்கள். எனவே, நான் அவரிடம், "நீங்கள் எப்படி காரில்லாமல் பேருந்தில் செல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர், "நான் எப்போதும் பேருந்தில் செல்வதால்தான்" என்று பதிலளித்தார், அவரது புதிய பதவி அவரது வழக்கமான நடைமுறையை மாற்றவில்லை. அவர் தனது பட்டத்துக்குரிய உரிமையை அனுபவிக்க உடன்படவில்லை.

பிலிப்பியில் உள்ள சபைக்கு எழுதிய நிருபத்தில், விசுவாசிகள் தாழ்மையுடன் இருக்கும்படி பவுல் கேட்டுக்கொள்கிறார் (வ.3). அவர்கள் "வாதினாலாவது" அல்லது "வீண்பெருமையினாலாவது" (வ.3) எதையும் செய்யக்கூடாது என்று அவர் கூறுகிறார். மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் உறவாடுவதில், "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே" (வ.5) கொண்டிருக்க வேண்டும். உன்னதமான அந்தஸ்தை இயேசு பெற்றிருக்கிறார். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்" (வ.6) இருந்தார். அவர் தனக்குரியதை ஒதுக்கி வைத்துவிட்டு, நம்முடைய நலன்களில் அக்கறை கொண்டார். அவர் "அடிமையின் ரூபமெடுத்து" , மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (வ.7-8).

நமது வேலை, கல்வி, வயது அல்லது சமூக அந்தஸ்து போன்றவற்றின் காரணமாக நாம் விசேஷமான முறையில் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாம் உணரும்போது, நமது தகுதிகளையும் நமது உரிமை உணர்வையும் எவ்வாறு ஒதுக்கி வைப்பது என்பதை இயேசு நமக்குக் காட்டினார் என்பதனை நினைவில் கொள்வோம். கடினமாக இருந்தாலும், நமக்குச் சொந்தமானதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து சக மனிதர்களிடம் பணிவாக இருக்கும் மனநிலையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவனின் திறந்த வாசல்கள்

ஒரு பெருநகர் அருகிலுள்ள எனது புதிய பள்ளியில், வழிகாட்டி ஆலோசகர் என்னை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தபின், மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் உள்ள ஆங்கில வகுப்பை எனக்கு கொடுத்தார். நான் எனது முந்தைய பள்ளியிலிருந்து சிறந்த தேர்ச்சி, சிறந்த மதிப்பெண்கள் மற்றும் எனது எழுத்துக்கான முதல்வரின் விருதுடன் வந்திருந்தேன். ஆனால் இந்தப் புதிய பள்ளியில் “சிறந்த” வகுப்பிற்கான கதவு எனக்குத் திறக்கப்படவில்லை. வழிகாட்டி ஆலோசகர் நான் பொருத்தமற்றவனோ அல்லது தயாராகவோ இல்லை என்று முடிவு செய்திருந்தார்.

இப்படிப்பட்ட சகஜமான பின்னடைவுகளை ஆதிதிருச்சபையான பிலதெல்பியா தன் அனுபவத்தில் பெற்றிருந்தது. சிறிய மற்றும் எளிமையான அந்த திருச்சபை இருந்த நகரம் சமீபத்திய ஆண்டுகளில் பூகம்பங்களால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தைச் சந்தித்திருந்தது. மேலும் சாத்தானின் எதிர்ப்பை சந்தித்தனர் (வெளிப்படுத்துதல் 3:9). புறக்கணிக்கப்பட்ட இந்த திருச்சபைக்கு உயிர்த்தெழுந்த இயேசு, “உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே” (வ.8) எனக் குறிப்பிட்டார். ஆகையால், “ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர்” (வ.7) அவர்களுக்கு “எவராலும் மூட முடியாத இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் “(வ.8) என்றார்.

நமது ஊழியத்திற்கும் இது பொருந்தும். சில கதவுகள் திறக்கப்படுவதே இல்லை. இருப்பினும், ஒரு வழிகாட்டி ஆலோசகர் கதவை அடைத்தாலும், தேவன் எனக்கு நிச்சயமாகவே கதவுகளைத் திறந்துள்ளார், அவருக்காக நான் எழுதுவதன் மூலம், உலகளாவிய உள்ளங்களைத் தொடும் வாய்ப்பை தந்தார். உங்களையும் மூடிய கதவுகள் தடுக்காது. இயேசு “நானே வாசல்” என்றார் (யோவான் 10:9). அவர் திறக்கும் கதவுகளுக்குள் நுழைந்து அவரைப் பின்பற்றுவோம். 

தேவனின் ஞானமான நோக்கங்கள்

இந்தியா வரலாறுகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் செல்லும் இடமெல்லாம், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் இடங்களைக் காணலாம். ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு வேடிக்கையான செய்தி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலருகே உள்ள ஒரு பலகையில், “இந்த இடத்தில், செப்டம்பர் 5, 1782 அன்று, எதுவும் நடக்கவில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.

அநேக வேளையில் நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்காதது போலவே தோன்றுகிறது. அவர் இப்போதே பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்புடன், நாம் மீண்டும் மீண்டும் ஜெபிக்கிறோம், நமது விண்ணப்பங்களை நமது தந்தையிடம் கொண்டு வருகிறோம். சங்கீதக்காரனாகிய தாவீதும் ஜெபிக்கையில் இப்படிப்பட்ட விரக்தியை வெளிப்படுத்தினான்: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?” (சங்கீதம் 13:1). அதே வண்ணம் நாமும் எளிதாக “ஆண்டவரே, நீர் பதிலளிக்க இன்னும் எவ்வளவு காலம்?” எனலாம்.

எனினும், நம் தேவன் ஞானத்தில் மட்டுமல்ல, அவருடைய நேரத்திலும் பூரணர். எனேவ தாவீது சொன்னான், “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்”(வ. 5). பிரசங்கி 3:11, “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” என்று நமக்கு நினைவூட்டுகிறது. ‘நேர்த்தியாக” என்ற சொல்லுக்கு “பொருத்தமானது” அல்லது “மகிழ்ச்சியின் காரணம்” என்று பொருள். தேவன் நாம் விரும்பியபடி நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் எப்போதும் தனது ஞானமுள்ள நோக்கங்களைச் செயல்படுத்துகிறார். அவர் பதில் கொடுக்கும்போது, அது சரியாகவும், நல்லதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நாம் மனதார நம்பலாம்.